Shivanandalahari – Verse 39

39 – அடைந்தென்னை ஆள்கின்ற அய்யன் அடி போற்றி!

धर्मो मे चतुरङ्घ्रिकः सुचरितः पापं विनाशं गतं
कामक्रोधमदादयो विगलिताः कालाः सुखाविष्कृताः |
ज्ञानानन्दमहौषधिः सुफलिता कैवल्यनाथे सदा
मान्ये मानसपुण्डरीकनगरे राजावतंसे स्थिते ||३९ ||
த₄ர்மோ மே சதுரங்க்₄ரிக: ஸுசரித: பாபம் வினாஶம் க₃தம்
காமக்ரோத₄மதா₃த₃யோ விக₃லிதா: காலா: ஸுகா₂விஷ்க்ருதா: |
ஜ்ஞானானந்த₃மஹௌஷதி₄: ஸுப₂லிதா கைவல்யனாதே₂ ஸதா₃
மான்யே மானஸபுண்ட₃ரீகனக₃ரே ராஜாவதம்ஸே ஸ்தி₂தே ||39 ||
மனத்தா மரைநகர முனைத்தாள் மறைபரம
பதித்தாள் அடைவரதி – பதியோனே
மனத்தாள் வதையறிய வினைத்தீ விதையவிய
அறத்தாள் அவைநிறுவி – அதியோக
குணத்தா லாசைகெடு சினத்தா னானசெறுக்
கறத்தாய்ந் தானகணம் – சுகமாக
வளத்தா லானபயிர் நலத்தால் ஞானமுயர்
வரத்தால் சீலமினி – வசமேயாம்
(39)

மனமாகிய தாமரை மலர்ந்த நகரத்தில், அனைவராலும் வணங்கப்பட்டவரும், எல்லா அரசர்களுக்கெல்லாம் அரசராகவும், ஈரற்றதாக்கி விடுதலை தருகின்ற தலைவரும் ஆன பரம்பொருள் வீற்றிருப்பதால், நான்கு பாதங்களை உடைய தருமம் நன்கு வளர்க்கப்படுகிறது. பாவங்கள் நசிக்கப்படுகின்றன. ஆசை, சினம், ஆணவம் முதலானவை (அதனால்) விலகி விட்டன. நேரம் இனி எப்போதும் இன்பத்தையே தருகின்றது. அதனால் ஞானம் எனும் நற்பயிர் வளர்ந்து நற்பயனை அளிக்கின்றது.

குறிப்பு:
தர்மமும், ஞானமும் காட்டும் பாதையில் இருப்போர்க்கு, மனதில் தெளிவும், அறிவில் உறுதியும் இருக்கிறது. அவ்வுறுதியினால், ஆன்மாவாம், உயிரின் உயிரான ஒளியே பரம்பொருள் என்பது நிச்சயப்படுகிறது. அதன் விளைவாக, எல்லாப் பொழுதும், எல்லாப் பொருளும் இறைமயமாகவே தெரிகின்றன. இதன் விளைவாக, துயரம் என எதுவும் இல்லை. எல்லாக் கெட்ட குணங்களும் மறைகின்றன. உள்ளும் வெளியும் எப்போதும் மகிழ்ச்சியே நிலவுகிறது. அதனால் மேன் மேலும் நமக்குள் ஆன்ம அறிவு வளர்ந்து, பெரும் சுகத்தை அளிக்கின்றது.

தர்மத்தின் நான்கு பாதங்களாக, தவம், தூய்மை, கருணை, உண்மை எனப் பேசப்படுகின்றன. தர்மம் இல்லாத வாழ்க்கையில், இப்பாதங்கள் ஒவ்வொன்றாகச் சிதைந்து மறைகின்றனவாம். (39)

38 – முழுமதியாய் மனமுகிழ்த்த மூதோன் அடி போற்றி!

40 – அல்லல் அறுக்கும் அரும்பயிர்நீர் வளம்போற்றி!

Share this Post

Leave a Comment