Shivanandalahari – Verse 61

61 – பக்திவழி காட்டிப் பாவிப்பான் அடி போற்றி!

अङ्कोलं निजबीजसन्ततिरयस्कान्तोपलं सूचिका
साध्वी नैजविभुं लता क्षितिरुहं सिन्धुः सरिद्वल्लभम् |
प्राप्नोतीह यथा तथा पशुपतेः पादारविन्दद्वयं
चेतोवृत्तिरुपेत्य तिष्ठति सदा सा भक्तिरित्युच्यते ||६१ ||
அங்கோலம் நிஜ பீ3ஜ ஸந்ததிரயஸ்
காந்தோபலம் ஸூசிகா
ஸாத்4வீ நைஜ விபு4ம் லதா க்ஷிதி-ருஹம்
ஸிந்து4ஸ்ஸரித்3 வல்லப4ம் |
ப்ராப்னோதீஹ யதா2 ததா2 பஸு1-பதே:
பாதா3ரவிந்த3-த்3வயம்
சேதோ-வ்ரு2த்திருபேத்ய திஷ்ட2தி
ஸதா3ஸா ப4க்திரித்யுச்யதே ||61 ||
கோந்துஎன வீழ்ந்தவிதை கோலமரம் சூழ்ந்தகதை
காந்தனுட னூசிமுனை – தனதாக
நேர்ந்தபதி சேர்ந்தசதி சார்ந்தமரம் போர்ந்தகொடி
ஊர்ந்தநதி கூடுங்கடல் – அதுபோலே
நீந்துமன மீண்டருமை நோன்றுசிவ மூன்றமதி
நூர்ந்தகதி சேருந்திரு – வடிசேர்ந்து
பாந்தநிலை தூயதருட் தோய்ந்தகலை நேயதவப்
பக்திநிலை ஆய்ந்தருள்க – பசுநாதா
(61)

அங்கோல மரத்தின் விதைகள் விழுந்தாலும் அம்மரத்தின் அடியிலே ஒட்டி வளர்வதுபோல, குத்தூசி காந்தத்தை நாடுவதுபோல, பத்தினிப் பெண் தன் கணவனையே நினைத்து இணைதல் போல, மரத்தினைச் சார்ந்து பிணையும் கொடியினைப்போல, ஓடிச் சென்று கடலில் கலக்கும் நதியினைப்போல, மனதின் விழுப்பமும், உயிர்களின் தலைவனான பரசிவனின் பாத மலரிரண்டையும் எப்போதும் எண்ணி, நிலை பெற்றிருந்தால் அதுவே பக்தி எனப்படும்.

குறிப்பு:
பக்தியின் பலவகை நிலைகளை இப்பாடல் விளக்குகிறது.

அங்கோலம் அல்லது வெளித்தாண்டி எனும் மரத்தின் விதைகள் கீழே விழுந்தாலும், மரத்தின் அடியில் ஒட்டிக் கொள்ளுமாம். காந்தம்-ஊசி இவற்றின் ஈர்ப்பும் ஒருவகை. மனமொத்த கணவன், மனைவியின் இணைப்பும் ஒருவகை. மரத்தோடு பிண்ணிப் பிணைந்த கொடியும் ஒருவகை. எல்லாவற்றுக்கும் மேலாக, எங்கு பிறந்தாலும், எந்த வழியில் நடந்தாலும் ஒரே குறிக்கோளாகக் கடலை மட்டுமே நாடி, ஓடி, அதில் இறுதியில் கலந்து தன்னிலையையும் இழக்கின்ற நதியும் ஒருவகை. அது அத்வைதம் எனும் இரண்டற்ற நிலையினை ஈட்டும் பக்தி. இவை எல்லாமே இறைவனின் பால் நமக்கு இருக்கும் ஈடுபாட்டினை, பக்தி எனும் பொருளால் உணர்த்தப்படும் அன்பின் நிலையாக இப்பாடலில் காட்டப் படுகின்றன.

‘சேதோ வ்ருத்தி’ என்ற அறிவின் வளர்ச்சியையும், ‘ஸதா திஷ்டதி’ என எப்போதும் நிலை பெற்றிருத்தல் என்பதையும். தமிழில் அருமையான குணங்களை ஈண்ட மனம், சிவச் சிந்தனையில் ஊன்றி, நோன்று நூர்த்து இருத்தல் எனப் பொருள் தரும்படியாக ‘மீண்டருமை நோன்றுசிவ மூன்றமதி நூர்ந்தகதி’ எனக் காட்டப் பட்டது. (61)

60 – ஏழையிடர் தீர்க்கும் எம்மான் அடி போற்றி!

62 – சிவபக்தியாம் அன்னைச் சீலம் அடி போற்றி!

Share this Post

Leave a Comment